கோவையில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்- தேடும் போலீஸ்
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் சங்ககிரியை சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்வம் என்ற செல்வராஜ் (31). இவர் பீளமேடு பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.
சிறிது காலம் பிணையில் இருந்து இவர், கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செல்வராஜை அவரது மனைவி வாரம் வாரம் வந்து மனுப்போட்டு சந்திப்பது வழக்கம். ஆனால் மனைவிக்கும் செல்வராஜுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் இருந்த மனைவி செல்வராஜை சுமார் மூன்று மாதங்களாக வந்து பார்க்கவில்லை. இதனால் மனம் உடைந்து போன கைதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு, கம்பிகளால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
சக கைதிகள் அளித்த தகலின் அடிப்படையில், சிறைக்கு வந்த அதிகாரிகள், செல்வராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி செல்வராஜ், இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மருத்துவமனையில இருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதும் தனியார் காவலர்கள் செல்வத்தை தீவிரமாக தேடினர். அதேபோல சிறைத்துறை காவலர்களும் கோவை மாநகர போலீசாரும் தப்பித்து ஓடிய சிறைக் கைதியை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள்தண்டனை கைதி திடீரென தப்பியோடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.