புதிய தலைமை செயலக முறைகேடு வழக்கு- கைவிரித்த உயர் நீதிமன்றம்

புதிய தலைமை செயலக முறைகேடு வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதையடுத்து 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகம் கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.அது குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி திமுக வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணையின் போது, ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டு, முறைகேடு தொடர்பான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கை போலீஸ் விசாரணைக்கு மாற்றுவதற்கு முன்பு தலைமை செயலாளர் தீர விசாரிக்க வில்லை.

ஆவணங்களை பார்க்க வில்லை. அவர் எந்திரத்தனமாக செயல் பட்டுள்ளார். எனவே வழக்கு பதிவு செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

தடை விதிக்க மறுத்த நீதிபதி, ரகுபதி ஆணையத்தில் இருந்து ஊழல் தடுப்பு போலீசாரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட விவரத்தை குறித்து தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More News >>