உச்ச- உயர் நீதிமன்ற நீதிபதிகள் வார நாட்களில் விடுப்பு எடுக்க தடை

நாடு முழுவதும் வழக்குள் தேக்கத்தை முடிவுக்கு கொண்டு வர உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற கொலுஜியம் , உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் 2 மூத்த நீதிபதிகள் உடனான ஆலோசனைக்கு பின்னர் இந்த முறையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிமுகப்படுத்தி உள்ளார்.

இனி வார நாட்களில் அத்தியாவசிய விடுப்பு தவிர பிற விடுப்புகள் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் 3 முறை சுற்றுலா விடுப்பு எடுக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று நீதிமன்ற வேலைநாட்களில் கருத்தரங்கில் பங்கேற்பது , அயல்நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கீழ்நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்வுக் காணப்படுவது தொடர்பாக இனி நாள்தோறும் கண்காணிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குற்ற வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு, உயர்நீதிமன்றங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மேல்முறையீடு வழக்குகளை பட்டியலிடவும், இதேபோன்று நிலுவையில் உள்ள வழக்குகள் பட்டியலை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தகுதியான நபர்களை நீதிபதி பணியிடத்துக்கு தேர்வு செய்து அனுப்பவும், இந்த பணியில் எந்தவித அழுத்தத்துக்கும் இடம் தர வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற கொலுஜியத்தை தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More News >>