குடியரசு துணை தலைவருக்கு கருப்பு கொடி- புதுச்சேரியில் 30 பேர் கைது

புதுச்சேரி வந்த குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு புதுச்சேரி வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கூட்டமைப்பினர், முத்தியால்பேட்டையில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். காவலர் வயது வரம்பை தளர்த்த வேண்டும். புதுச்சேரி பல்கலைகழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் கலைந்து செல்ல மறுத்து விமான நிலையத்திற்க்கு செல்ல முயன்ற போது, அனைவரையும் போலீசார் கைது செய்தனர்

More News >>