9 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய சுவர்: பாகிஸ்தானில் பரிதாபம்

பாகிஸ்தானில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் குலாம் சர்வார் ஷம்பானி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலும் மண் வீடுகளில் தான் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் சுமார் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டின் சுவர் ஒன்று திடீரென இடிந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது விழுந்தது. இதில், குழந்தைகள் மண்ணுக்குள் புதைந்து வெளிவர முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்து விரைந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இதில், 7 பெண் குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், படுகாயத்துடன் மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>