புதுமண தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கி நகை கொள்ளை- திருவான்மியூரில் பயங்கரம்nbsp

திருவான்மியூர் கடற்கரையில் பட்ட பகலில் புதுமண தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கி மர்ம நபர்கள் 12 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.    சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கதிரவனுக்கும், அனிதா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் இன்று அதிகாலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர்.    புதுமண தம்பதி மிகவும் குதூகலமாக கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆளரவமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அனிதாவின் செயினை பறிக்க முயன்றுள்ளனர். கதிரவன் மர்ம நபர்களை தடுக்க முயன்றுள்ளார்.    ஆனால்,அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், கதிரவனையும், அனிதாவையும் பலமாக தாக்கியுள்ளனர். இருவரும் மயங்கி கீழே விழுந்த பின்னர், கழுத்தில்,கைகளில் இருந்து 12 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.    புதுமண தம்பதியை பார்த்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த திருவான்மியூர் போலீசார், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பட்ட பகலில் புதுமண தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
More News >>