சத்தீஸ்கரில் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பாலி-தனாகர் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் பழங்குடி தலைவருமான ராம்தயாள் உய்கே, பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் ராமன் சிங் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் 12 மற்றும் 20 என இரு கட்டங்களாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் பகுதியில் பிரபலமான பழங்குடி தலைவராக அறியப்பட்டவர் ராம்தயாள் உய்கே. தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டபோது மார்வாகி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார் ராம்தயாள் உய்கே. அப்போது முதல் அமைச்சராக பதவியேற்ற அஜித் ஜோகி, சட்டப்பேரவைக்கு வருவதற்கு உதவும் வண்ணம், தமது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராம்தயாள் ராஜினாமா செய்தார். இப்போது அவர் மீண்டும் பாரதீய ஜனதா கட்சிக்கு திரும்பியுள்ளார்.

"பல ஆண்டுகளாக மூச்சு முட்டிய நிலையில் காங்கிரஸில் சமாளித்து வந்தேன். காங்கிரஸ் தனது கொள்கையையும் சித்தாந்தத்தையும் விட்டு விலகிவிட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல், காங்கிரஸின் நற்பெயரை சிதைத்துவிட்டார். பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளை காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக சத்தீஸ்கர் முதல் அமைச்சர் ராமன் சிங் எடுக்கும் நடவடிக்கைகள் மீண்டும் பாரதீய ஜனதாவில் சேரும்படி என்னை வழிநடத்தியது," என்று ராம்தயாள் கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது முதல் அமைச்சர் ராமன் சிங்கும், பாரதீய ஜனதா மாநில தலைவர் தரம்லால் கௌசிக்கும் உடன் இருந்தனர்.

ராம்தயாளுக்கு பழங்குடியினர் தனி தொகுதிகளான மார்வாகி அல்லது பாலி தனாகர் தொகுதியில் போட்டியிட பாரதீய ஜனதாவில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

“ராம்தயாள் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அவர் பாரதீய ஜனதாவிலிருந்து சந்தர்ப்பவாதியாக காங்கிரஸில் சேர்ந்துள்ளார். மீண்டும் அங்கேயே திரும்பியுள்ளார்.

அவரது விலகல் எவ்விதத்திலும் காங்கிரஸூக்கு இழப்பல்ல; மாறாக, நன்மையே," என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் சைலேஷ் நிதின் திரிவேதி தெரிவித்துள்ளார்.

More News >>