ரயில் மேற்கூரை துளையிட்டு கொள்ளை: 2 ஆண்டுக்கு பின் இருவர் கைது

ஓடும் ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சுமார் ரூ.323 கோடி பழயை, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்க கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு ரயில் புறப்பட்டது. மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தது. பின்னர், பணம் இருந்த ரயில் பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்துப் பார்த்தபோது, ரூ.5.78 கோடியை மர்ம ஆசாமிகள் ரயிலில் மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சேலம் ஜங்ஷன் அல்லது எழும்பூர் ரயில்நிலையத்தில் தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ள என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், 2 ஆண்டுக்கு மேல் ஆகியும் கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. மத்திய அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்ற நாசா சேலம் ஜங்ஷனில் இருந்து வந்த ரயிலின் 350 கி.மீ., தூரத்தை செயற்கைகோள் மூலம் புகைப்படங்களாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்திற்கும் விருதாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக கைதான இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பின்னர், ரயில் விருதாசலம் வந்ததும் பணக்கட்டுகளை கூட்டாளிகளிடம் கொடுத்தோம். பின்னர், ரயில் நிலையத்தில் இறங்கி கூட்டாளிகளுடன் மத்திய பிரதேசகத்திற்கு இவர்கள் தப்பியதாக கூறியுள்ளனர்.

More News >>