புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11.91 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்திருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுஹு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்க்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 14 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மொத்தம் 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 231 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 675 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

பெயர் நீக்கம் செய்ய ( படிவம் 7 ) 1 லட்சத்து 36ஆயிரத்து 199 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்க்கொள்ள ( படிவம் 8 ) ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 708 பேரும், முகவரி மாற்றம் செய்ய ( படிவம் 8 A ) 1லட்சத்து 12 ஆயிரத்து 916 பேர் என மொத்தம் 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

தொடர்ந்து வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது என்றும், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இறுதி வாக்களர் பட்டியல் ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News >>