துர்கா பூஜை: கொல்கத்தாவில் 1000 கிலோ சாக்லேட்டில் துர்கை சிலை

கொல்கத்தாவில் பிரபல உணவகம் ஒன்றில் ஆயிரம் கிலோ சாக்லேட்டால் உருவாக்கப்பட்டுள்ள துர்கா தேவி சிலை பக்தர்களை கவர்ந்து வருகிறது.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு, துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து சிலைகளை வைத்து பூஜை செய்யும் சுமார் 28 குழுக்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

அதன்படி, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பல்வேறு பகுதியிலும் துர்கா தேவியை பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, காய்கறி, சோளம் என புதுவிதங்களில் சிலைகளை அமைத்துள்ளனர் இதைக்காண தினமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்து துர்கா தேவியை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொல்த்தாவில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமைந்திருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் 10 அடி உயரத்தில் ஆயிரம் கிலோ சாக்லேட்டுகளால் ஆன துர்கா தேவி சிலை வடிவமைத்துள்ளனர்.

இந்த சிலை பார்வையாளர்களையும், பக்தர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சிலையை வடிவமைக்க 12 நாட்கள் ஆனதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சாக்லேட் சிலையை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

More News >>