ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை - தினகரன் அதிரடி

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் `ஹீரோவாக தெரிகிறார்கள். உண்மையிலே ஜீரோக்கள். இவர்களை எதிர்கொள்வது பெரிய விஷயமே இல்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். பின்னர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். பிறகு, சட்டசபை வளாகத்திற்கு வெளியில் செய்தியாளர்களை சந்திக்கையில், “சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சி மீது பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.

இவர்களுக்கு பதிலடி கொடுத்து சென்னையில் பேட்டி அளித்த டிடிவி தினகரன், “2017-ல் நாங்கள் பல சோதனைகளை சந்தித்தோம். எங்களுடன் இருந்தவர்களே துரோகிகளாக மாறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி நினைப்பது எதுவும் நடக்காது. பகல் கனவு காண்பது எடப்பாடி அணியினர்தான். இவர்கள் பெயரளவுக்கு தான் ஆளும் கட்சி. இவர்கள் எல்லோரும் அட்டைக் கத்தி வீரர்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆடிட்டர் குருமூர்த்திக்கே பயந்து சாகிறார்கள். காக்கிச் சட்டையை பார்த்தாலே பயப்படுகிறவர்கள். வழக்கு என்றாலே பயப்படுபவர்கள். இன்று ஹீரோவாக தெரிகிறார்கள். உண்மையிலே ஜீரோக்கள். இவர்களை எதிர்கொள்வது பெரிய விஷயமே இல்லை” என்றும் தினகரன் கூறினார்.

More News >>