தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் உள்பட 16 பேர் கடந்த ஆகஸ்டு மாதம் 18ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது, மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 16 பேரையும் கைது செய்து, கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புத்தளம் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 8 மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் அபராதமும், கட்டத்தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட் 16 தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

மேலும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அநியாய அபராதத்தினை ரத்து செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

More News >>