கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2 வது அணு உலையில், பராமரிப்பு பணி காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலான மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக 2 வது அணுஉலையில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது.

பராமரிப்பு பணிகள் முடிந்து அதே மாதம் 26ஆம் தேதி மாலை மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை பராமரிப்பு பணிக்காக மீண்டும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே முதலாவது அணு உலையானது கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பராமரிப்பு மற்றும் எரிப்பொருட்கள் நிரப்பும் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>