பாகிஸ்தானில் கோர விபத்து: இரு பேருந்துகள் மோதி 19 பேர் பலி

பாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் பேருந்துகள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் நகரில் சென்றுக் கொண்டிருந்த பேருந்துகள் எதிரெதிரே மோதி பயங்கர விபத்தை சந்தித்தன. இதில், சம்பவ இடத்திலேயே 15 பேர் உடல் நசுங்க உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சுமார் 40 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இதில், மேலும் 4 பேர் உயிரிழந்து, விபத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு பிரதமர் இம்ரான் கான் மற்றும் குடியரசுத் தலைவர் ஆரிப் அல்வி ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பலரது உடல்நிலை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

More News >>