முத்திரை: ஆஸ்துமாவை குணப்படுத்தும் கருட முத்திரை

கருடன், ஆகாயம் எனும் காற்றுமண்டலத்தில் சுற்றி, அதை ஆள்வதைப் போல, உடலில் உள்ள காற்றைக் (வாயுவை) கட்டுப்படுத்தும் என்பதால், இந்த முத்திரைக்கு ‘கருட முத்திரை’ என்று பெயர். இந்த முத்திரையைச் செய்வதால் உடலில் உள்ள வாயுக்கள் சீராகும்.

எப்படிச் செய்வது?

நிமிர்ந்து அமர்ந்த நிலையில், கைகளை அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, உள்ளங்கை உடல் நோக்கியபடி, இடது கை மீது வலது கையை வைத்து, கட்டைவிரல்களைக் கோக்க வேண்டும். பார்க்க சிறகுகள் விரித்ததுபோல இருக்கும். இப்போது, விரல்களைச் சிறகு போல விரித்து அசைக்கவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். பிறகு, 20 விநாடிகள் அமைதியாக இருக்கவும். பிறகு, தொப்புள் பகுதி, மேல் வயிறு, மார்புக்கூட்டுக்கு நடுவில் என ஒவ்வொரு பகுதிக்கும், நேராக கைகளை வைத்து இதேபோல் செய்ய வேண்டும். முத்திரையை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.

கவனிக்க:உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தவிர்க்கவும்.

பலன்கள்:

உடலின் நான்கு பாகங்களிலும் இந்த முத்திரையைச் செய்வதால், முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், வயிறு, நுரையீரல் மற்றும் இதயம் பலப்படும்.கழிவுநீக்க மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் செயல்பாடு சீராகும். ரத்த ஓட்டம் சீராக பாயும். வேலைப் பளுவின் காரணமாக ஏற்படும் சோர்வில் இருந்து விடுபட்டு, உடனடி உற்சாகம் மற்றும் புத்துணர்வு கிடைக்க உதவும். அடிவயிற்றுப் பகுதியில் செய்வதால், சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்று வலி, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஆகிய பிரச்னைகளின் வீரியம் குறையும்.தொப்புளுக்கு நேராக வைத்து இந்த முத்திரையைச் செய்வதால், உடலில் உள்ள வாயுக்கள் சமன்படுகின்றன. உடலில் ஒரு பக்கம் மட்டும் ஏற்படும் வலி, மதமதப்பு, உணர்ச்சியற்ற தன்மை சரியாகின்றன. மேல் வயிற்றுக்கு நேராக செய்வதால், பசியின்மை, செரிமானப் பிரச்னைகள் சரியாகும். நெஞ்சுப் பகுதிக்கு நேராக செய்வதால், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
More News >>