தெலங்கானாவில் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுங்கள்- சந்திரபாபு நாயுடு

தெலங்கானாவில் தொகுதி ஒதுக்கீட்டில் காங்கிரஸுடன் அனுசரித்து செல்லும்படி தமது கட்சியினருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவரும் ஆந்திர முதல் அமைச்சருமான சந்திரபாபு நாயுடு அறிவுரை கூறியுள்ளார்.

119 உறுப்பினர் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் பரபரப்பாக பணியாற்றி வருகின்றன.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவரும் ஆந்திர முதல் அமைச்சருமான சந்திரபாபு நாயுடு முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த திங்கள்கிழமையன்று ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியுடன் அனுசரித்து செல்லும்படி அறிவுரை கூறிய அவர், போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அரசு அமைந்ததும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

செரிலிங்கம்பள்ளி, கூகட்பள்ளி, உப்பல் உள்ளிட்ட 12 தொகுதிகளை தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று தெரிவித்த நாயுடு, கூடுதலாக நாங்கள் 6 முதல் 8 தொகுதிகளை கேட்போம் என்று கூறினார்.

ஹைதராபாத் பெருநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆந்திராவிலிருந்து சென்று குடியமர்ந்த மக்கள் அதிகம் இருப்பதால் அங்கு தெலுங்கு தேசம் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த தேர்தலின்போது பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு 10 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு 5 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தது.

ஜூபிலி ஹில்ஸ், கைராடாபாத், இப்ராஹிம்பட்டணம், முஷிர்பாத் மற்றும் ராஜேந்திரா நகர் போன்ற தொகுதிகளை காங்கிரஸிடம் கேட்டு வாங்குவதற்கு தெலுங்கு தேசம் கட்சி விரும்புகிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் சந்திர பாபு நாயுடுவின் முடிவை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சிக்கிறார்.

ஆனால், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு எதிராக மட்டுமல்ல, தேசிய அளவில் பாரதீய ஜனதா அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராகவும் வலுவான மகா கூட்டணி அமைய வேண்டும் என்பதில் சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறார்.

More News >>