இன்னும் சற்று நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடிதம் கொடுத்தனர். இதனால், சபாநாயகரால் 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இதனால், மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணன் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டு தெரிந்துக் கொண்டார். பின்னர், கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி முதல் தனது விசாரணையை தொடங்கினார்.

விசாரணையின்போது, டிடிவி தினகரன் தரப்பை தொடர்ந்து, சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி நிறைவு செய்தனர். இதையடுத்து, 3வது நீதிபதி சத்யநாராயணன் வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவிக்கப்படாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மீதான வழக்கின் தீர்ப்பு இன்று (25.10.2018) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாவது நீதிபதியான சத்திய நாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பை வழங்கி இருக்கிறார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>