தினகரன் மீது கோபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்!

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் வழங்கிய தீர்ப்பு ஒட்டு மொத்த டி.டி.வி தரப்பையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது தினகரன் மீது அதிருப்தி எற்பட்டு இருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது.

தினகரன் தங்களை ஏமாற்றியது ஏன் என்று குற்றாலத்தில் தங்கியிருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் கொதித்து போயுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் உடனடியாக குற்றாலத்திற்கு செல்லுமாறு கடந்த திங்களன்று தினகரன் உதவியாளர்களிடம் இருந்து உத்தரவு சென்றுள்ளது. ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் நேரடியாக தினகரன் செல்போன் எண்ணுக்கே சென்றுள்ளனர். அப்போது இந்த வார இறுதிக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளது, தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும் என்று தினகரன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏதேனும் ட்ரிக் செய்வார்கள் எனவே அனைவரும் ஒரே இடத்தில் தங்கியிருக்குமாறு தினகரன் அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு தீர்ப்பு நமக்கு சாதகமாகத்தான் வருமா? என்று தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் திரும்ப திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு துளியளவும் சந்தேகம் வேண்டாம் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும் என்று உறுதியாக தினகரன சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்தே உற்சாகமாக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் குற்றாலம் சென்றுள்ளனர். நெல்லை அமமுக பிரமுகர் இசக்கிக்கு சொந்தமான குற்றாலம் ரிசார்ட்டில் 18 பேரையும் தங்க வைப்பதாக ஏற்பாடு. ஆனால் வெற்றிவேல் தான் குற்றாலம் செல்லவில்லை என்று கூறிவிட்டார். இதனை தொடர்ந்து தங்கதமிழ்செல்வன் தலைமையில் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 15 பேர் குற்றாலம் சென்றனர். அவர்களுடன் எம்.எல்.ஏக்களாக இருக்கும் மூன்று பேரும் இணைந்து கொண்டனர். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என்று தினகரன் கூறியிருந்த காரணத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக 3 நாட்கள் பொழுதை கழித்துள்ளனர் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்

ஆனால் வியாழக்கிழமை அன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் வழங்கிய தீர்ப்பு ஒட்டு மொத்த டி.டி.வி தரப்பையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தீர்ப்பை கேட்டு குற்றாலத்தில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் ஒரு கனம் ஆடிப்போய்விட்டனர். இதற்கு இடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இதனால் குற்றால ரிசார்ட்டில் இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் கொதித்துப் போய் ஆள் ஆளுக்கு ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு கட்டத்தில் தினகரனுக்கு தொடர்பு கொண்டு போனை கொடுத்துள்ளனர், அப்போது பேசிய சிலர் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்றதால் தான் குற்றாலத்திற்கு வந்தோம், ஆனால் நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்கிற ரீதியில் பேசியுள்ளனர். ஆனால் ஏதோ தவறு நடந்துவிட்டது, பொறுமையாக இருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு தினகரன் போனை கட் செய்துள்ளார். ஆனால் எம்.எல்.ஏக்கள் ஒரு நிமிடம் கூட இனி குற்றாலத்தில் இருக்கப்போவதில்லை என்ற கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து மதுரைக்கு செல்லலாம் என்று கூறி அவர்களை செந்தில்பாலாஜி அழைத்துச் சென்றுள்ளார்.

More News >>