பாலியல் புகார்: பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம்!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆராய்ச்சி மாணவ, மாணவிகளுக்கான பயிற்றுநராக இருந்தவர் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ். இவர் தன்னுடன் செல்போனில் பேசி பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி ஒருவர் ஆடியோ சிடியுடன் துணைவேந்தர் பாஸ்கரனிடம் புகார் அளித்தார். ஆராய்ச்சி மாணவிகளின் ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமெனில் தனக்கு இணங்குமாறு பேராசிரியர் கோவிந்தராஜ் வற்புறுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து பல்கலைக்ககழக குழு நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து பேராசிரியர் கோவிந்தராஜை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரன் இன்று ஆணையிட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு கோவிந்தராஜ் பாலியல் தொல்லை அளித்ததாகவும் அந்த வெறுப்பில் மாணவி படிப்பையே விட்டு விட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

More News >>