தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல்!

 பொங்கல் திருநாளில் பள்ளி கல்வித் துறைக்கு என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றபிறகு  அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட்  கிளாஸ் ரூம்ஸ், ஆங்கில வழிக்கல்வி, எல்கேஜி, யூகேஜி  வகுப்புகள் என அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன

அதன் தொடர்ச்சியாக பள்ளி கல்வித் துறைக்கு என  பிரத்யேகமாக டிவி சேனல் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுஉள்ளது.

தொழில்நுட்ப பணி மற்றும் தொலைக்காட்சிக்கான காட்சிகளை பதிவு செய்யவும் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.மேலும், காட்சி பதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 பள்ளி கல்வித் துறைக்கு என பிரத்யேகமாக டிவி சேனல் ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் அன்று துவங்கப்படும்  என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

More News >>