பாகிஸ்தான் - சீனா இடையே விரைவில் பேருந்து போக்குவரத்து

பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே இரு நகரங்களை இணைக்கும் வகையில் புதிய பேருந்து சேவை வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சீனாவின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் அரபிக்கடலை ஒட்டி பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகத்தை சீனாவில் தன்னாட்சி உரிமைபெற்ற உய்குர் பகுதியுடன் இணைக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் லாகூர் நகரை சீனாவில் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பேருந்து சேவை வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போக்குவரத்து மூலம் சுமார் 30 மணி நேரத்தில் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பயணிக்கலாம். இதற்காக கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழி கட்டணமாக 13 ஆயிரம் ரூபாயாகவும், இருவழி கட்டணமாக 23 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா இடையே நேரடி சாலை வழி இல்லை என்பதால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக பேருந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More News >>