தீபாவளி ஸ்பெஷல்: காரமான எள்ளடை / தட்டை

வருகின்ற தீபாவளிக்கு காரமான மற்றும் சுவையான எள்ளடை அல்லது தட்டையை செய்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

தேவையானப் பொருட்கள்:

புழுங்கல் அரிசி   -   2 கப்புகள்

பொட்டுக்கடலை -   1/2 கப்

கடலைப் பருப்பு   -   1 டேபிள் ஸ்பூன் ( ஊற வைக்கவும்)

காய்ந்த மிளகாய்  -   6.

பூண்டு   -   2 பற்கள்.

பெருங்காயம்   -   சிறிது.

உப்பு   -   தேவையான அளவு.

எண்ணெய்   -   பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைக்கும் போது அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும். மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.

மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும். அதே சமயம் நைசாக அரைக்க வேண்டும். அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.

பொட்டுகடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, கடலைப் பருப்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும். அதுதான் சரியான மாவு பதம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்றவும். மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து பருத்தி துணியை வைத்து வட்டமாக தட்டவும். மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும். அவ்வளவு மெலிதாக தட்ட வேண்டும்.

எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வைக்கவும். இதுபோல அனைத்தையும் செய்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும். சுவையான மொறு மொறுப்பான எள்ளடை தயார்.

More News >>