உள்ளே வெளியே - இரண்டாம் ஆட்டத்திற்கு தயாராகும் பார்த்திபன்

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது ‘உள்ளே வெளியே’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களை இரண்டாம் பாகமாக வெளியிடுவது ட்ரெண்ட் ஆகியுள்ளது. பில்லா. சாமி, சிங்கம், கலகலப்பு, முனி ஆகிய திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்தன. அந்த வரிசையில் நடிகர் பார்த்திபனும் களமிறங்கியுள்ளார்.

பார்த்திபன் நடித்ததோடு தானே தயாரித்து இயக்கியிருந்த படம் ‘உள்ளே வெளியே’. 1993 இல் வெளியான இந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கான தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பார்த்திபன், “மலேசிய நாட்டுக்கோர் நற்செய்தி! 5, 6, 7 தேதிகளில் நடிகர்கள் சங்கவிழாவுக்கும் என் அடுத்த படமான‘உள்ளே வெளியே-2’ படத்துக் கான தயாரிப்பாளர்களை உறுதிசெய்யும் பணிக்காகவும் வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இரண்டாம் பாகப் படங்களை இயக்குபவர்கள் பட்டியலில் பார்த்திபனும் இடம்பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>