மனித உயிர்களை காக்க தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: முத்தரசன்

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பலி அதிகரிப்பு குறித்த அமைச்சரின் விளக்கம் விந்தையாக உள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் காரணமாக ஒவ்வொரு நாளும் உயிர்ப்பலி அதிகரித்து கொண்டே உள்ளது மிகுந்த கவலையளிக்கின்றது. பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட தினசரி பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

சென்னை, சேலம், திருவள்ளுர், மதுரை, கடலூர், நெல்லை, திருப்பூர், விழுப்புரம் என அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் எல்லா இடங்களிலும் பரவி, உயிர்களை பலி வாங்கி வரும் செய்திகள் நாள் தவறாமல் நாளேடுகளிலும், தொலைக் காட்சிகளிலும் முதன்மை செய்திகளாக வருகின்றது.

ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் இத்தகைய நோய்கள் கொசுக்களால் பரவி வருவதை அரசு நன்கு அறியும். சுகாதாரப் பணிகளை செம்மையாக, காலத்தில் மேற்கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறியதால் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகி வருகின்றன.

சுகாதாரத் துறை அமைச்சர் பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என கூறுவது விந்தையாக உள்ளது.

தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொண்டு, மனித உயிர்களை காக்க, தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முத்தரசன் கூறி உள்ளார்.

More News >>