எச்1பி விசா விவகாரம்: இந்தியர்களை சொந்த நாட்டிற்கு வரவேற்கும் ஆனந்த் மகிந்திரா

மும்பை: எச்1பி விசா தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததுபோல் நடந்தால், இந்தியாவின் எழுச்சிக்கு உதவுவதற்காக சரியான நேரத்திற்கு வரும் இந்தியர்களை வரவேற்கிறேன் என மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணிப்புரிய எச்1பி விசா மூலம் லட்சக்கணக்கான பேர் செல்கின்றனர். அமெரிக்காவில், மற்ற நாடுகளை விட இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு வேட்டு வைக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பை அமெரிக்கன்ஸ் ஹயர் அமெரிக்கன்ஸ் என்ற கொள்கையின் அடிப்படையில், எச்1பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்.

இதில், எச்1பி விசாவின் ஆயுட்காலத்தை நீட்டிக்க தடை விதித்தும், எச்1பி விசா வைத்திருப்பவர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால் அது கைக்கு கிடைக்கும் வரை அவரவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பது தான் அந்த புதிய கட்டுப்பாடு.

இதனால், 5 லட்சம் முதல் ஏழரை லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், எச்1பி விசாவின் புதிய கட்டுப்பாடு தொடர்பாக பிரபல நிறுவனமான மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தியர்களை வரவேற்கும் விதமாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து ஆனந்த் மகிந்திரா கூறுகையில், “எச்1பி விசா தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததுபோல் நடந்தால், இந்தியாவின் எழுச்சிக்கு உதவுவதற்காக சரியான நேரத்திற்கு வரும் இந்தியர்களை வரவேற்கிறேன். இந்தியர்களுக்கு நல்வரவு” என்றார்.

More News >>