தபேலா, ஆர்மோனியம் வாசியுங்கள் - லாலுவுக்கு தண்டனை அறிவிக்காமல் இழுத்தடிப்பு

ரூ. 84 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பிலான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் உட்பட 16 பேரை குற்றவாளிகள் என்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி அறிவித்தது.

எனினும் தண்டனை விவரங்களை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென இறந்ததால் தண்டனை அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகும் கடந்த 2 நாட்களாக தண்டனை அறிவிப்பை வெளியிடாத நீதிபதி சிவபால் சிங், வழக்கை மீண்டும் சனிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார். இன்றைய தினமாவது தீர்ப்பளிக்கப்படுமா? என்பது இனிமேல் தெரியும்.

இதனிடையே, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சிவபால் சிங், லாலு ஆதரவாளர்களால் கடும் கோபத்திற்கு ஆளானதே தண்டனை அறிவிப்பு தள்ளிப்போவதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

வியாழனன்று உறுதியாக தண்டனை அறிவிக்கப்பட்டு விடும் என்று லாலுவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி இருந்தனர். அப்போது, ‘‘சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ள அறை மிகவும் குளிராக இருக்கிறது என்றும், தன்னை பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை” என்றும் லாலு தெரிவித்தார்.

அப்போது, “உங்களுக்கு தபேலா இல்லை ஆர்மோனியம் வாசிக்க தெரியும் என்றால் ஏற்பாடு செய்கிறேன்; குளிருக்கு இதமாக வசித்துக் கொள்ளுங்கள்” என்ற நீதிபதி, “நீங்கள் நீதிமன்றத்தில் சந்திக்கும் நபர்களே போதும் தனியாக சிறையிலும் சிலரை சந்திக்க வேண்டாம்” என்று காட்டமாக கூறினார்.

அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையன்றும் தீர்ப்பு வழங்காத நீதிபதி, சனிக்கிழமையன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>