அதிமுக நிர்வாகியை கிண்டலடித்து ஆர்.ஜே.பாலாஜி ட்வீட்

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி ஒருவர் புகார் அளித்திருப்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் 12ம் தேதி ரிலீசாகவுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இதில், சூர்யா, செந்தில், கீர்த்தி சுரேஷ், ஆர்.ஜே.பாலாஜி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடல் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆகி உள்ளது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது என்ற வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக கிண்டலடித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசியுள்ளார்.

ட்விட்டரில், “ அன்பார்ந்த ஊடக நண்பரே(அதிமுகவை கிண்டலாக இப்படி அழைத்திருக்கிறார்) நன்றி. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு விளம்பரம் செய்வதற்கென தனியாக பட்ஜெட் இருக்கிறது. ஆனால் வெளியே பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். தயவு செய்து அதைத் தீர்க்க ஏதாவது செய்யுங்கள். இப்படி வழக்கு போடுவதற்குப் பதில் உங்கள் கட்சிக்காரர்களை போக்குவரத்து வசதியில்லாமல் தவிக்கும் பொது மக்களுக்கு லிப்ட் தரச் சொல்லுங்கள்” என்று கிண்டலாக தெரிவித்திருக்கிறார்.

More News >>