சபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, மதம் சார்ந்த பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்புகளையும் மீறி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று பெண்கள் சிலர் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டங்கள் வலுவடைந்து வந்ததால் பதற்றமான சூழல் உருவா னது.

இந்நிலையில், சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சற்று நேரத்திற்கு முன்பு நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக 48 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த மனுக்கள் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More News >>