அழகப்பா பல்கலை. பாடநூலில் இருந்து அண்ணாவின் படைப்பை நீக்குவதா? வைகோ கடும் கண்டனம்

அழகப்பா பல்கலைக் கழகப் பாடநூலில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகத்தை நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் பல்கலைக் கழகமாக இயங்கி வரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இளங்கலை தமிழ்த்துறைப் பாட நூல்களில் ஒன்றாக பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘நீதிதேவன் மயக்கம்’ எனும் நாடகம் இடம் பெற்றிருந்தது. இதனை நவம்பர் 9-ஆம் தேதி நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக திரைப்பட வசனகர்த்தா அரு. ராமநாதன் எழுதிய ‘ராஜராஜ சோழன்’ பற்றிய நூல் சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகப் பாடத் திட்டக்குழு அளித்த பரிந்துரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தப் பல்கலைக் கழகத்தின் கல்லூரி மேம்பாட்டுத் துறைத் தலைவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் நாடக நூலை நீக்கி விட்டு, அதற்குப் பல்கலைக் கழகம் அளித்துள்ள விளக்கம் விசித்திரமாக உள்ளது. ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்திற்கு விளக்கமளிக்கக் கூடிய வழிகாட்டல் நூல்கள் இல்லை என்றும், அவற்றை வாங்குவதற்கு மாணவர்கள் அதிகம் செலவிட வேண்டியதாக இருக்கிறது என்றும் பல்கலைக் கழகப் பாடத் திட்டக்குழு கருதுகிறதாம்.

பேரறிஞர் அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடக நூலுக்கு வழிகாட்டல் நூல்கள் கிடைக்காவிடில், அதனைத் தேடிப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு இருக்கிறது. ஆனால், மூல நூலையே வேண்டாம் என்று பாடத் திட்டத்திலிருந்து நீக்குவது எந்த வகையிலும் ஏற்கத் தக்கது அல்ல.

பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் பழமைவாதங்களை மூடக் கருத்துகளைச் சாடும் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகம், சமூக நீதியை மையக் கருவாகக் கொண்டது ஆகும். பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகள் எளிய வார்த்தைகளில் வலிய கருத்துகளை எடுத்து இயம்புவதாகவே இருக்கின்றன.

‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தை நீதிமன்றத்தில் நடக்கும் உரையாடல் வடிவத்தில், எளிதில் கருத்துகளை இதயத்தில் ஊடுருவச் செய்யும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் படைத்திருக்கிறார்கள். இதனை மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு தனி வழிகாட்டல் நூல்கள் தேவை இல்லை.

ஆனால், அழகப்பா பல்கலைக் கழகப் பாடத் திடடக்குழு, பேரறிஞர் அண்ணா அவர்களின் நாடகத்தை நீக்கி விட்டு, அதற்குக் காரணம் கூறியிருப்பது நியாயம் அல்ல.

பேரறிஞர் அண்ணா அவர்களின் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தையே தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகப் பாட நூலில் இருந்து நீக்குகின்ற துணிச்சல் இவர்களுக்கு எப்படி வந்தது?

கடந்த நான்கரை ஆண்டுகளாக கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் சனாதனப் பிற்போக்குக் கும்பலின் ஊடுருவல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அறிவுத் துறையில், ஆராய்ச்சித் துறையில் திணிக்கப்பட்டு வரும் சனாதன கூட்டத்தின் கருத்துகள், தற்போது தமிழ்நாட்டின் பல்கலைக் கழகப் பாடத் திட்டங்களிலும் புகுத்தப்படுவதை மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்க முடியாது.

தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் டெல்லிக்கு ‘அடமானம்’ வைத்து விட்ட ஆட்சியாளர்கள் பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு, அவரது சிந்தனைப் படைப்புகளுக்குத் தடைபோட துணிந்து இருக்கின்றனர்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தை அழகப்பா பல்கலைக் கழகம் பாடத் திட்டத்திலிருந்து நீக்கி இருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அழகப்பா பல்கலைக் கழகம் அறிஞர் அண்ணாவின் படைப்பை மீண்டும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்; இல்லையேல் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

More News >>