பிர்சா முண்டா.. முண்டாசு தட்டும் கோபி நயினார்- ரஞ்சித் ஆதரவாளர்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீரமுடன் போரிட்டு 25 வயதில் மரணித்துப் போன ஆதிகுடி இன மாவீரன் பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது தொடர்பாக இயக்குநர்கள் கோபி நயினார் மற்றும் பா. ரஞ்சித் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

பிர்சா முண்டா வரலாற்றை தமிழில் படமாக்கப் போவதாக அண்மையில் இயக்குநர் கோபி நயினார் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் பிர்சா முண்டா திரைப்படத்தை பாலிவுட்டில் ரஞ்சித் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

தற்போது பிர்சா முண்டா திரைப்படத்தை முதலில் இயக்கப் போவதாக அறிவித்தது யார்? என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் களைகட்டியிருக்கிறது. ஏற்கனவே மெட்ராஸ் திரைப்படம் கோபியின் கறுப்பர் நகரம் என்ற படத்தின் கதைதான் என்கிற பஞ்சாயத்து வெடித்தது.

பின்னர் ரஞ்சித் ஒரு கட்டத்தில் இரண்டு திரைப்படங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிர்சா முண்டாவை முன்வைத்து கோபி நயினார்- ரஞ்சித் இரு தரப்பும் மோதி வருகின்றனர்.

கோபியின் ஆதரவாளர் கருந்தேள் ராஜேஷ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், இயக்குனர் கோபியை நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இதற்கு ரஞ்சித்தின் ஆதரவாளரும் காலா படத்தின் வசனகர்த்தாவுமான மகிழ்நன் பா.ம. எழுதியுள்ளதாவது:

இயக்குனர் கோபியை நான் நம்புகிறேன் என்று Karundhel Rajesh கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கிறார்.

நம்புங்கள் அது உங்கள் வசதி...உங்கள் நம்பிக்கைக்கு தர்க்கம் தேவைப்படாமல் இருக்கலாம்...

ஆனால், உண்மைக்கு தேவைப்படும்....

கோபியின் கருப்பர் நகரம் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்டிராங் Vijay Armstrong மெட்ராஸுக்கும், கருப்பர் நகரத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்று எழுதினார். கருப்பர் நகரம் ஸ்கிரிப்டை படித்த எழுத்தாளர் கரன் கார்க்கி (Karan Karki) , மெட்ராஸுக்கும் கருப்பர் நகரத்திற்கும் தொடர்பில்லை என்று எழுதினார்.

அதெல்லாம், போதாதென்று கருப்பர் நகரத்தின் தயாரிப்பாளர் பாலு, அவருடைய அண்ணன் வீரக்குமார் ஆகியோரும், அந்த கதைக்கும், கருப்பர் நகரத்திற்கு தொடர்பில்லை என்றனர்... ஏன், அறம் படத்தையொட்டியே, தேவையேயில்லாமல், காழ்ப்பின் அடிப்படையில், இரஞ்சித் மீது முகநூலில் அவதூறை அள்ளி சில முட்டாள்கள் வீசியபோது, நான் கோபியை அழைத்து பேசினேன். என் வீட்டிற்கு அழைத்து பேசினேன்..

”நான் இதுவரை மெட்ராஸ் என்னுடைய கதை என்று சொன்னதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்

எதற்காக உங்களுடைய சக படைப்பாளி மீது தொடர்ந்து வன்மத்தோடு சேறள்ளி வீசப்படுவதை குறித்து மௌனமாக இருக்கிறீர்கள், உங்கள் படத்தின் காப்பி இல்லை என்ற உண்மையை வெளியில் சொல்லிவிடலாமே என்று சொன்னதற்கு “அதை எப்படி நான் சொல்வது, தர்மசங்கடமாகி விடும்” என்று கூறினார்.

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இயக்குனர் கோபிக்கும், தோழர் மீரா கதிரவனுக்கு விருது வழங்கப்பட்ட போது, மேடையிலேயே, ”என் கதைக்கும், கோபி அவர்களின் கதைக்கு எவ்வித தொடர்புமில்லை. அவரோடு நான் எவ்வித ஸ்கிரிப்ட் விவாதமும் நடத்தவில்லை.” என்று கூறியபின்னரும்...

உங்களுக்கு போதுமான தரவுகள் இல்லை என்று உங்கள் பங்குக்கு நீங்களும் சேறள்ளி வீசுவீர்கள் என்றால்...

அறம் பற்றி ஜெயமோகன் வகையறாக்கள்தான் பேசுவார்கள்..=========================================காலா படபிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே, ஏன் அதற்கு முன்னரே, பிர்சாவை பற்றி படமாக்கும் எண்ணம் இருந்ததையும், அதற்கான திட்டப்பணிகள் தொடங்கிவிட்டதையும், தோழர் பரிசல் சிவ. செந்தில்நாதன், , தோழர் Madhav Katta , தோழர் Prasanna Balachandran ஆகியோர் நன்றாக அறிவார்கள். எனக்கு தெரிந்து மேலும், ஒரு சாட்சி தோழர் Kotravai N கூட..

மேற்கண்டவர்களுக்கு, தயாரிப்பாளரை உறுதி செய்யாமல், ஐடியா இருக்கிறது என்று கோபி ஒவ்வொரு ஊடகத்துக்கும் அழைத்து அறிவித்த அக்டோபருக்கு முன்னரே தெரியும்...

இப்பதிவில் மகிழ்நன் குறிப்பிடும் Kotravai N-ம், அக்டோபரில் தோழர் கோபி அறிவிப்பை வெளியிட்டார். இரஞ்சித்துடன் இருப்பவர்களுக்கும், உரையாடியவர்களுக்கும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவர் பிர்ஸா முண்டா குறித்து படமெடுக்கப் போகிறார் என்பது தெரியும். இது ஒருபுறம் இருக்கட்டும். நேற்று இரஞ்சித்தின் அறிவிப்பு வந்ததும் இந்த சலசலப்புகள் தொடங்கி இருக்கிறது, அல்லவா? ஆனால் சம்பந்தப்பட்ட இரு இயக்குனர்கள் எங்கேனும் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்தி ஏதும் அறிக்கை விட்டிருக்கிறார்களா - இந்தப் படம் யார் முதலில் தொடங்கியது என்பது குறித்து? அப்படியில்லையெனில், இங்கு மற்றவர்களின் நாட்டாமை புலனாய்வுகளுக்கான அவசியம் என்ன?

ஆம் ஆய்வு செய்வதற்கான நூல்களை நானும் வழங்கியதால் தோழர் இரஞ்சித் பிர்ஸா முண்டா குறித்து படம் இயக்கப் போகிறார் என்பது எனக்கு 6 மாதங்களுக்கு முன்பே தெரியும்... தீவிரமாக இயக்குனர் குழு வேலை பார்த்ததும் தெரியும். கோபியின் அறிவிப்பைக் கண்டு நான் அதிர்ச்சியுற்று இரஞ்சித்திடம் பேசியபோதும் கூட அவர் "ஒன்றும் பிரச்சினையில்லை தோழர் அவரும் பண்ணட்டுமே.." என்று தான் கூறினார். இதுதான் இரஞ்சித் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பரிசல் சிவ. செந்தில்நாதன் ”ஆயிரமாயிரம் பிர்ஸா முண்டாக்கள் வரட்டும்” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளதாவது:

நண்பர்களே எனக்குப்பிடித்த எழுத்தாளர் மகாசுவேதா தேவி .பரிசல் வெளியீடாக எழுத்தாளர் ,மொழி பெயர்ப்பாளர் அனுமதியுடன் 1084ன் அம்மா என்ற நாவலை முதல் பதிப்பாக 2007 ல் வெளியிட்டேன்.இரண்டாம் பதிப்பு

2016 ல் வெளியிட்டேன் .அதற்குப்பின் 1995 ல் வெளிவந்த காட்டில் உரிமை நாவலை என்னுடைய சேகரிப்பில் வைத்திருந்தேன்.

2015 வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு மயிலாப்பூரில் பரிசல் புத்தக நிலையம் திறந்தேன் .பாரதி புத்தகாலயம் வெளியிட்ட சிறுகதை தொகுப்பு உட்பட மகாஸ்வேதா தேவியை நினைவு கூறும் வகையில் சிறு கூட்டத்தையும் நடத்தினோம் .எப்பொழுதும் தீராத வாசிப்பில் உள்ள இயக்குனர் தோழர் ரஞ்சித் அவர்கள் பல்வேறு நூல்களை கேட்டுபெறுவார் .அப்படியாக என்னால் 2016 ல் பரிந்துரைக்கப்பட்ட நூலே முண்டாவின் வரலாற்றை சொல்லும் காட்டில் உரிமை நாவலாகும் .அதை அவர் படித்து விட்டு போனில் ,அண்ணே மொதல்ல கெளம்பி வாங்க என்று சொல்லி - சாவ கத்து கொடுக்கிறேன்னு பிர்ஸா சொல்றான்ணே என்று அவ்வளவு உணர்சிக் கொந்தளிப்புடன் கூறினார் .அதற்குப்பிறகு நாவல் தந்த பாதிப்பில் திரைப்பட வேலைகளுக்கான பணிகளை தொடங்கிவிட்டார் .

அதற்குப்பிறகு எஸ்.பொ .மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஆப்பிரிக்க நாவல்கள் பத்துக்கும் மேற்பட்டது அவைகளையும், 1/4 என்ற சிறுபத்திரிகையின் ஆசிரியர் மலர்மன்னன் நா.பாவின் தீபம் பத்திரிகையில் எழுதிய கானகத்தின் குரல் என்ற பிர்சாவின் நாவலை விருட்சம் அழகிய சிங்கரிடமிருந்தும்,கோதாவரி பாருலேகர் எழுதிய கண்விழித்த கானகம் என்ற நாவலையும் ,விடியல் பதிப்பகம் வெளியிட்ட சில நூல்களையும் அவரிடம் சேர்த்தோம் .அதற்குப்பிறகு சாகித்திய அக்கடாமியில் அலுவலர் சீனிவாசனிடம் பேசி மறுபதிப்பாக காட்டில் உரிமை நாவலை 2017 ல் கொண்டு வந்தேன் .இதுதான் நான் அறிந்த வரையில் தோழர் ரஞ்சித்தின் பிர்சா முண்டா வின் திரைப்படதிற்க்கான உண்மையான வரலாறு.

இது பரிசல் சிவ .செந்தில்நாதனை தெரிந்த அனைவருக்கும் தெரிந்த வரலாறு .

தோழர் ரஞ்சித்தின் பிர்சா முண்டா திரைப்படம் மகத்தான வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்

More News >>