சம்பள பாக்கி கேட்டு வீடியோ வெளியிட்ட மெர்சல் பட மேஜிக் கலைஞர்

மெர்சல் படத்தில் பணியாற்றியதற்கான 4 லட்சம் ரூபாய் சம்பளம் பாக்கி இன்னும் தனக்கு வழங்கவில்லை என்று மேஜிக் கலைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் மெர்சல். எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்திருந்தார். இதில், ஒரு வேடத்தில் மேஜிக் கலைஞராக விஜய் நடித்திருந்தார்.

இதற்காக, மூன்று மேஜிக் நிபுணர்கள் விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்று பல்வேறு விருதுகளையும் தட்டிச் சென்றது. இந்த படத்தின் மேஜிக் பற்றியும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், தனக்கு 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வழங்கவில்லை என்று கனடாவைச் சேர்ந்த மேஜிக் கலைஞர் ராமன் சர்மா புகார் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மேலும், தேனாண்டாள் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமாவின் கணவர் முரளியுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்ட கருத்துகளையும் ஆதாரமாக வெளியிட்டார். சர்கார் பிரச்னை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மெர்சலால் மீண்டும் ஒரு பிரச்னை கிளப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News >>