ஹேப்பி பெர்த்டே லேடி சூப்பர்ஸ்டார்!

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாராவுக்கு இன்று 34வது பிறந்தநாள்.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் 1984ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பிறந்த டயானா மரியம் குரியன் தான் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ள நயன்தாரா.

பலரும் இவரை கேரள பெண்ணாகவே நினைப்பர். அதற்கு காரணம் 2003ஆம் ஆண்டு ஜெயராமின் மலையாள படமான மானசின்னகரே படத்தில் இவர் அறிமுகம் ஆனது தான். பின்னர் 2005ஆம் ஆண்டு சரத்குமாரின் ஐயா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இன்றும் அந்த காந்தவிழி காதுமா தமிழ் ரசிகர்களின் கனவு கன்னிதான்.

விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா,ஆரம்பம், ரஜினியுடன் சந்திரமுகி, தனுஷுடன் யாரடி நீ மோகினி, சூர்யாவுடன் ஆதவன், ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, சிம்புவுடன் வல்லவன், இது நம்ம ஆளு, விக்ரமுடன் இருமுகன், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், தற்போது ஒரு படம் என சூப்பர்ஸ்டார் முதல் சிவகார்த்திகேயன் வரை என பல முன்னணி ஹீரோக்கள் படத்திலும் தனது தனி முத்திரை நயன்தாரா பதித்துள்ளார்.

தற்போது, ஹீரோவுடன் ஒரு படம் என்றால், கதையின் நாயகியாக ஒரு படம் என இரண்டு குதிரைகளிலும் சரியாகவும் சவாலாகவும் சவாரி செய்கிறார்.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் மற்றும் கோலமாவு கோகிலா படங்கள் பிளாக்பஸ்டர் ஆகின. அறம் படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாரா அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற பேச்சும் உலவி வருகிறது.

சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடன் காதல் புரிந்த நயன்தாரா இருவரையும் கல்யாணம் செய்தார் எனவும் பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனால், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. இவரை ஆவது அனைவரும் அறியும் படி எப்போது திருமணம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களை ஆட்டிப் படைக்கின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி அடிக்கும் தென்னிந்திய லேடி சூப்பர்ஸ்டார் பாலிவுட்டில் கால் பதிப்பாரா என்பது பில்லியன் டாலர் கேள்வி!

More News >>