உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 3 இந்திய வீராங்கனைகள் அபாரம்!

டெல்லியில் நடைபெற்று வரும் 10-வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

57 கிலோ எடை பிரிவில் நேற்று நேரடியாக 2வது சுற்றில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சோனியா லாத்தோர், மொராக்கோ வீராங்கனையான டோஜானியை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீராங்கனை சோனியா லாத்தோர் ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் முடிவில் 5-0 என்ற கணக்கில் முழு புள்ளிகளையும் பெற்று டோஜானியை வீழ்த்தி சோனியா லாத்தோர் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சோனியா முன்னேறியுள்ளார்.

இதேபோல் 51 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 4-1 என்ற கணக்கில் அர்மேனியா வீராங்கனை அனுஷ் கிரிகோர்யானை சாய்த்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 64 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமெலி மூரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

More News >>