வட தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடந்த கஜா புயல் தற்போது, அரபிக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் எதிரொலியால், தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி வங்கக்கடலில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்தம் உருவானது. இது தற்போது வலுவடைந்து, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இது மெல்ல மெல்ல நகர்ந்து தற்போது சென்னைக்கு தென் கிழக்கு பகுதியிலும் இலங்கைக்கு வடமேற்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழக கடலோரப் பகுதிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் என்பதால், டெல்டா பகுதியில் இருந்து சென்னை வரை மழை பெய்யும் என்றும் நாளை வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் சென்னை கடலோரப் பகுதிக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வரும் 28ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைதவிர, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளது என்பதால் வட தமிழகத்தில அதிகளவில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

More News >>