எட்டிப்பார்க்காத எடப்பாடியின் திடீர் ஆகாய பயணம் இதற்கு தானாம்

கஜா புயலின் கோரத்தாண்டவ பாதிப்புகளை திடீரென ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ததற்கு ருசிகர பின்னணி இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. கனமழை காரணமாக தமது பயணம் ரத்து செய்யப்பட்டது என தன்னிலை விளக்கமும் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தற்போது பிரதமர் மோடியை சந்திக்க டெல்லியில் அவர் முகாமிட்டுள்ளார். எடப்பாடியின் இந்த திடீர் ஆகாய பயணத்துக்கு காரணமே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தான் என கண்சிமிட்டுகின்றன கோட்டை குருவிகள்.

கடந்த முறை ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அசரடித்தார் பன்வாரிலால் புரோகித். இம்முறை ‘எட்டிப்பார்க்காத’ முதல்வர் என எடப்பாடி பழனிசாமி பெயர் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஆளுநர் பன்வாரிலால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் திட்டத்தை வகுத்து கொண்டிருந்தார்.

ஆளுநர் மாளிகையில் இருக்கும் கோட்டை விசுவாசிகள் இதை அப்படியே போட்டுக் கொடுக்க, உடனே ஆகாய பயணத்தை நடத்திக்காட்டிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.

-எழில் பிரதீபன்

 

More News >>