பொன். ராதாகிருஷ்ணனுக்கு அவமரியாதை.. குமரியில் இன்று பாஜக பந்த்- கடைகள் மூடல்- பஸ்கள் மீது கல்வீச்சு

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா சபரிமலையில் அவமரியாதை ஏற்படுத்தப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி யாத்திரை சென்றார் பொன். ராதாகிருஷ்ணன். தமது ஆதரவாளர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அங்கிருந்து அரசுப் பேருந்தில் அவரும் அவரது ஆதரவாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். இது தங்களை அவமதிக்கும் செயல் என கொந்தளித்தார் பொன். ராதாகிருஷ்ணன்.

இதனைத் தொடர்ந்து பொன். ராதாகிருஷ்ணனை கேரளா அவமதித்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் இன்று பாஜகவினர் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இன்று காலை முதல் அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இயக்கப்பட்ட 8 தனியார் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன் நேற்று இரவு முதலே கேரளா- தமிழகம் இடையேயான பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More News >>