இங்கிலாந்து அணி படுதோல்வி - 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 346 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக உஸ்மான் கவாஜா 171 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 83 ரன்களும் குவித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. மிட்செல் மார்ஷ் 101 ரன்களும், ஷான் மார்ஷ் 156 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், 303 ரன்கள் பின்தங்கியிருந்த இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், தொடக்க ஆட்டகாரர் ஸ்டோன்மேன் [0], அலைஸ்டர் குக் [10], ஜேம்ஸ் வின்ஸ் [18], டேவிட் மாலன் [5], என அடுத்தடுத்து வெளியேற 68 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து இருந்தது. ஜோ ரூட் [42], பைர்ஸ்டோ [17] இருவரும் களத்தில் இருந்தனர்.
கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலே இங்கிலாந்து அணி சரிவை சந்தித்தது. மேற்கொண்டு 87 ரன்கள் எடுப்பதற்குள் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. 180 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. மொத்தத்தில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4ஆவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி சமன் செய்திருந்தது.