பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்களுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவாண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் திருவிழா கடந்த 14ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் 10வது நாளான இன்று மாலை அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மலை சுமார் 2668 அடி உயரம் ஆகும்.

மகா தீபத்தை கண்ட பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்களை விண்ணை பிளக்க எழுப்பி வழிபட்டனர். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து மகா தீபத்தை தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது போல், கோவில் கொடி மரம் எதிரே உள்ள அகண்ட தீபத்திலும் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். தீபத்தை சுமார் 40 கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

More News >>