காசு.. பணம்.. துட்டு.. மணி.. இந்தியருக்கு அடிச்சுது ரூ.36 கோடி ஜாக்பாட்

துபாய்: துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியருக்கு பிக் டிக்கெட் லாட்டரி சீட்டு மூலம் ரூ.36 கோடி பரிசு கிடைத்துள்ளது. இந்த பணத்தை கொண்டு ஏழை மக்களுக்கு உதவ விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் நாயர்(42). இவர், துபாய் நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மேலும், துபாயில் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் அபுதாபியில் பிரபலமான பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை வாங்கினார். இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசாக 2.1 கோடி திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு 36 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 845 ரூபாய்) கிடைத்துள்ளது. இதனால் அவர் உற்சாகம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: எனக்கு கிடைத்துள்ள பணத்தில் குடும்பத்துடன் உலக சுற்றுலா செல்ல ஆசை இருக்கிறது. கேரளாவில் புதிதாக இன்னொரு வீடு கட்ட வேண்டும். அங்கு இருக்கும் எனது தாயார் மற்றும் என் மனைவியின் தாயரை நல்லபடியாக பராமரிக்க வேண்டும்.

எனது எதிர்கால திட்டத்தை தவிர, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவிட வேண்டும். கடவுள் அருளால் அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

More News >>