நண்பர்கள் வேறு...கூட்டணி மாறும்! துரைமுருகன் வைக்கும் சஸ்பென்ஸ்

உடையும் திமுக கூட்டணி- வைகோவுக்கு நோஸ்கட் கொடுத்த ஸ்டாலின்! எடப்பாடி பக்கம் தாவும் திருமாவளவன்! EXCLUSIVE

திமுக தலைவர் ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெருங்கி வந்து கொண்டிருந்தார். ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தன் லட்சியம் என்று வைகோ வெளிப்படையாகவே கூறினார். அதே போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுகவுடன் நெருக்கம் காட்டியது. எனினும், சமீப காலமாக இவர்களின் நட்புக்குள் விரிசல் விழுந்துள்ளதாகத் தெரிகிறது. 'திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா.. இல்லையா' என்றே தெரியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆதங்கப்பட்டார். 

திருமாவளவன் வெளிப்படையாக இப்படி சொன்ன பிறகும் திமுக தரப்பில் இருந்து வாய் திறக்கப்படவில்லை. திமுகவில் அமைதி காத்த நிலையில் திருமாவளவன் அதிமுக பக்கம் தாவப் போவதாகவும் தகவல் வெளியானது. அதற்கு அச்சாரமிடும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திருமாவளவன் சமீபத்தில் சந்தித்தார். சேலம் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பாக  எடப்பாடி பழனிச்சாமியை திருமாவளவன் சந்தித்ததாகச் சொல்லப்பட்டது. எனினும், அதிமுக - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிக்கான தொடக்கப்புள்ளியாகவே இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது. கஜா புயல் ஏற்பட்டதையடுத்து அதிமுக அரசின் செயல்பாடுகளை முதலில் திமுக பாராட்டியது. வைகோவும் தமிழக அரசை பாராட்டினார். ஆனால், வைகோ தமிழக அரசை பாராட்டியதே திமுக கிஞ்சித்தும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில். திமுக பொருளாளர் துரைமுருகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. துரைமுருகன் தன் பேட்டியில் '' கடைசி வரை எதிர்த்தவர்கள் கடைசி நேரத்தில் கூட்டணியில் இடம் பிடிப்பது உண்டு. மதிமுக , விடுதலை சிறுத்தை கட்சிகள் எங்களுடன் ஒத்த கருத்து கொண்டவர்கள். எங்கள் நண்பர்கள். ஆனால், கூட்டணி என்பது வேறு. நண்பர்கள் என்பது வேறு. கடைசிக்கட்டத்தில் கூட்டணி மாறலாம். எங்களுடன் நீண்ட நாள்களாக பயணிப்பவர்கள் கேட்கும் சீட் கொடுக்கவில்லை என்பதற்காக வெளியே சென்றதும் உண்டு. ஏற்கனவே பழைய கஸ்டமர்களான காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் இப்போது வரை கூட்டணியில் இல்லை. அவர்களுடன் இன்னும் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை'' என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

துரைமுருகன் பேட்டியால் திமுகவுடன் கூட்டணி அமைத்து  சில தொகுதிகளையாவது கைப்பற்றி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நம்பிக்கை குலைந்துள்ளது. இந்த கட்சிகள் தற்போது வேறு கூட்டணி குறித்து யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

More News >>