நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும் ராமர் கோவில் கட்டுவதற்கான தர்மசபா அயோத்தியில் தொடக்கம்

ராமர் கோவில் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தர்மசபா கூட்டம் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணகானோர் திரண்டு இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது.

அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இந்துத்துவா குண்டர்களால் தகர்க்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது.

பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்பது இந்துத்துவா அமைப்புகளின் வாதம். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தர்மசபா கூட்டத்தை அயோத்தியில் இன்று கூட்டியுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தர்மசபா தொடக்கத்தின் போது பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

More News >>