குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய காயத்ரி ரகுராம்!

சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே, குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த 'பிக்பாஸ் ' புகழ் காயத்திரி ரகுமாமுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

நடிகையும், நடன இயக்குனருமானவர் காயத்திரி ரகுராம் (34).  சார்லி சாப்லின் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பல படங்களுக்கும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

 விஜய் டிவியில் 'பிக்பாஸ்-1' நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் காயத்திரி ரகுராமும் ஒருவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சின் மூலம் நற்பெயரைவிட அவருக்கு கெட்ட பெயர் தான் மக்கள் மத்தியில் அதிகமாக கிடைத்தது. சக போட்டியாளர்களிடம் கீழிறங்கி சண்டை போடுவது, அராஜகமாக நடந்து கொள்வது என பார்வையாளர்களுக்கு இவர் மீது வெறுப்புதான் உண்டானது.

இந்நிலையில், சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே குடிபோதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி வந்த காயத்திரி ரகுராம் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினார்.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வீக் எண்ட் பார்ட்டி நடந்தது. இதில், திரைப்பட நடிகர், நடிகைகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், காயத்திரி ரகுராமும் கலந்து கொண்டார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அடையாறு நோக்கி அசுர வேகத்தில் தாறுமாறாக சென்றது. இதைக்கண்ட போக்குவரத்து போலீசார்  காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

அப்போது, காரை ஓட்டிவந்தது காயத்திரி ரகுராம் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து மது வாடை வந்ததால், மதுபோதை பரிசோதிக்கும் கருவியில் ஊதும்படி போலீசார் கூறினர்.

முதலில் மறுத்த காயத்திரி ரகுராம் நீங்கள் தான் குடித்துவிட்டு பணியில் உள்ளீர்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்பிறகு, போலீசார் வற்புறுத்தியதை அடுத்து கருவியின் மூலம் ஊதினார். அதில், காயத்திரி ரகுராம் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதன்பிறகு, காயத்திரி ரகுராம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து ரூ.2500 அபராதம் விதித்தனர். காயத்திரி ரகுராமால் மேற்கொண்டு  காரை ஓட்டி செல்ல முடியவில்லை. போலீசாரே அவருக்கு காரை ஓட்டி வீட்டில் கொண்டு விட்டனர்.

More News >>