உங்க அறிவுக்கு சூடம் கொளுத்திதான் போடனும்! ராமதாஸ் மரண கலாய்

தமிழக அமைச்சர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் செல்லுர் ராஜுவும் அவ்வப்போது வாய் தவறி ஏதாவது பேசி வைத்து விடுவார்கள். பின்னர், இணையத்தில் இரு நாள்களுக்கு மீம்ஸ்கள் ரூபத்தில் வலம் வருவார்கள்.

கஜா புயல் விஷயத்திலும் திண்டுக்கல் சீனிவாசன் பேசத் தெரியாமல் பேசி பா.ம.க தலைவர் ராமதாஸிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். வேதாரண்யம் பகுதியில் மின் கம்பம் நடும் பணிகளை பார்வையிட சென்ற திண்டுக்கல் சீனிவாசன், 'மின்கம்பங்களை நட விமானங்களை பயன்படுத்த வேண்டும்' என்று பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அருகிலிருந்த மற்றொரு அமைச்சர் ஓ.எஸ் மணியன், 'அண்ணே,,, அதுவெல்லாம் சாத்தியமில்லை' என்று சீனிவாசன் காதில் ஓதினார். ஆனாலும், 'அதெல்லாம் வெளிநாட்டுல கடலுக்குள்ளேயே பாலத்தை கட்டுறான். பெரிய நகரத்தையே கடல்ல கட்டுறான். முதல்ல விமானத்த வச்சு மின்கம்பங்களை நடும் டெக்னாலஜியை கண்டுபிடிக்க பாருங்கயா' என்று சளைக்காமல் தன் கருத்தை உறுதிபடுத்தினார்.

திண்டுக்கல் சீனிவாசன் தெரிந்துதான் பேசுகிறாரா இல்லையா என்று ரத்தத்தின் ரத்தங்கள் தலையை சொறிந்து கொண்டனர். பா.ம,க தலைவர் ராமதாஸ் திண்டுக்கல் சீனிவாசனை கலாய்த்து ட்விட் செய்துள்ளார். 'திண்டுக்கல் சீனிவாசனின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. சென்னையை புயல் தாக்கியிருந்தால் நீர்மூழ்கிக் கப்பல் கொண்டு பூமிக்கு அடியில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் ' என்று கூறியிருப்பார் என்று ராமதாஸ் நக்கலாக ட்விட்டியுள்ளார்.

More News >>