வைகோவை கிண்டலடித்த மு.க.அழகிரியின் மகன்

திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து செயல்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்கு, “அப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்.. நாங்கள் பாவம்” என்று ட்விட்டரில் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் உள்ள மதிமுக கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், முதல் தீர்மானமாக, “ திராவிட இயக்கத்தைக் காக்கவும், மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வலுவூட்டவும், தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து செயல்படுவது” என உறுதி ஏற்கப்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இந்த அறிவிப்பினால், இணையதளத்தில் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். மதிமுக இணைந்ததற்கு பிறகு தான் மக்கள் நலக் கூட்டணி காணாமல் போனது என கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வைகோ தொலைக்காட்சி செய்தியில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பேசியதை மேற்கோள் காட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்து உள்ளார்.

அதில், “அப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்.. பாவம் நாங்க” என தங்கிலீஷில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More News >>