சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமாவை சஸ்பென்ட் செய்தது பி.எஸ்.என்.எல்!

சபரிமலைக்கு பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதித்தது. தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயன்றாலும். பக்தர்கள் போராட்டம் காரணமாக பெண்கள் அங்கே சென்று சாமி தரிசனம் செய்ய இதுவரை முடியவில்லை. பெண் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். அதில், முதன்மையானவர் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா. இவர் இஸ்லாமிய பெண்ணாக பிறந்து வளர்ந்தாலும் மதச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், சபரிமலைக்குச் செல்ல விரதம் இருந்ததாக பேஸ்புக்கில் சற்று கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். பின்னர், கடந்த அக்டோபர் 29-ந் தேதி, இரு முடி கட்டி பம்பையில் இருந்து சந்திதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மலை ஏறி நடக்கவும் தொடங்கினார்.

சபரிமலையில் சந்திதானத்தை ரெஹானா நெருங்கும் சமயத்தில் பக்தர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மேலும் ரெஹானாவை சந்திதானத்துக்கு அழைத்துச் செல்வது ஆபத்தானது என்பதை உணர்ந்த போலீசார் அவரை மீண்டும் கீழே கொண்டு வந்து விட்டனர். பி.எஸ்.என். எல் நிறுவனத்தில் பணி பிரிந்த ரெஹானா, சபரிமலை செல்ல முயன்றதற்காக கொச்சியில் இருந்து மற்றோரு கிளைக்கு  மாற்றப்பட்டார்.

ஏற்கனவே , பேஸ்புக்கில் சபரிமலை விரத உடையுடன் அவர் பதிவிட்டிருந்த கவர்ச்சியான புகைப்படம் குறித்து பத்தனம்திட்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை. தொடர்ந்து இன்று ரெஹானா கைது செய்யப்பட்டார். கொச்சியில் கைது செய்யப்பட்ட ரெஹானா பத்தனம்திட்டா கொண்டு செல்லப்பபட்டார்.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லூநராக பணியாற்றி வந்த ரெஹானவை அந்த நிறுவனம் சஸ்பென்ட் செய்துள்ளது. 

More News >>