தெறிக்கவிட்ட ஐஜி பொன். மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு- இளைஞர்களை நம்பி செல்வதாக உருக்கம்!

ரயில்வே காவல் படை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், நாளை ஓய்வு பெறுகிறார். 

சென்னை அயனாவரத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரயில்வே காவல்படையின் சென்னை மண்டல முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் மற்றும் பல ரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய பொன்.மாணிக்கவேல் பணியின் போது பெற்ற பல சுவாரஸ்யமான அனுபவங்களை ரயில்வே காவலர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் காவலர்கள் திறன்பட செயலாற்ற முடியும் என ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். மேலும், புகார் என்று வரும் பொதுமக்களை, உயர் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்க வைக்காமல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். விழாவில் குறைவாக பேசுமாறு மனைவி எழுதிக்கொடுத்ததையும் மேடையில் படித்துக்காட்டினார்.

அத்துடன் தாம் இளைஞர்களை நம்பியே ஓய்வு பெறுவதாகவும் உருக்கமுடன் பொன். மாணிக்கவேல் கூறினார்.

இதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு சிறப்பு வெகுமதி அளித்து பாராட்டினார்.

More News >>