சென்னையில் எத்தனை சதவிகித மக்கள் நன்றாக உறங்குகிறார்கள்? -ஆய்வு சொல்லும் உண்மை

அதிக கோபம் வருவதற்கு போதுமான நேரம் தூங்காததும் ஒரு காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் லாவா பல்கலைக்கழகம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, சரியாக தூங்காதவர்கள், ஏமாற்றத்தை, தோல்வியை சந்திக்க நேரிடும்போது கோபத்தில் கொந்தளித்து விடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

தூக்கத்தை கெடுக்கும் காரணிகள்:

தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள், சரியாக இல்லையென்றால் தூக்கம் வராது. வேறு சிலருக்கு எங்காவது நாய் குரைக்கும் சத்தம் கேட்டால்கூட தூக்கம் கெட்டுப் போகும். தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் போன்களை பார்ப்பதால் 25 விழுக்காடு பேரும், எதிர்காலத்தை குறித்து யோசித்து கவலைப்படுவதால் 22 விழுக்காடு மக்களும், படுக்கைக்குச் சென்ற பிறகும் மடிக்கணினியில் வேலை செய்வதால் 19 விழுக்காட்டினரும், சமூக வலைத்தளங்களில் மேய்வதால் 19 விழுக்காடு பேரும் வெகு தாமதமாக உறங்குவதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

யாரெல்லாம் எவ்வளவு நேரம் உறங்குகிறார்கள்?

இரவு 10 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளாக தூங்க செல்வதே நலம் என்று கூறப்படுகிறது. ஆனால், பெங்களூருவில் 63, சென்னையில் 62 குருகிராமில் (குர்ஹான்) 64  ஹைதராபாத்தில் 60  கொல்கத்தாவில் 64  மும்பையில் 69 சதவிதத்தினரும் இரவு 11 மணிக்குப் பின்னரே உறங்க செல்கின்றனராம்.

மொத்தத்தில் 59 சதவிதத்தினர் இரவு 11 மணிக்குப் பின்னரே உறங்குகின்றனர்.

21 சதவித மக்கள் நடுச்சாமத்திற்குப் பின்னரே உறக்கத்தினுள் நுழைகின்றனர். 31 சதவிகித மக்கள் 7 மணி நேரத்திற்கு குறைவாகவே உறங்குகின்றனர். நன்றாக வளரும் பருவமாகிய 18 வயதுக்கும் குறைவான விடலைப் பருவத்தில் 27 சதவிதத்தினர் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகின்றனர். பெண்களில் 11 சதவிதத்தினர் 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே உறங்கி ஓய்வெடுக்கின்றனர். காலை எட்டு மணிக்குப் பின்னர் எழும்பும் கும்பகர்ணன் வகையினர் 26 சதவிதத்தினர்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இருவகையினர்:

தூக்கத்திற்கும் கோபத்திற்கும் இடையே உள்ள உறவை கண்டுபிடிப்பதற்கு ஆய்வுக்குட்பட்டவர்களை இரு வகையாக பிரித்தனர். ஒரு வகையினருக்கு உறங்குவதற்கு போதுமான நேரம், அதாவது ஏழு மணி நேரத்திற்குக் குறையாமல் கொடுக்கப்பட்டது. அடுத்தப் பிரிவினருக்கு இரண்டு அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே உறங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இரண்டு இரவுகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆய்வு தொடங்குவதற்கு முன்னரும் பின்னரும் அவர்களது நடத்தையில் காணப்பட்ட வித்தியாசம் ஆய்வாளர்களால் கவனிக்கப்பட்டது. குறைவான நேரம் தூங்கியவர்கள், எளிதில் கோபமுறுவது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய சத்தம் கூட அவர்கள் கோபத்தை தூண்டியது. தொந்தரவு கொடுக்குமளவு சத்தம் இல்லாவிட்டாலும்கூட, உறக்கம் போதாதவர்கள் எளிதில் கோபமுற்றார்கள்.

உறக்கமும் எதிர்மறை மனநிலையும்

போதுமான நேரம் உறங்காதவர்களின் மனதில் நேர்மறை எண்ணங்கள் குறைந்துபோகின்றன. உத்வேகம், மகிழ்ச்சி அனைத்தையும் இழந்து, எதிர்மறை எண்ணம், எரிச்சல், கவலை ஆகியவற்றில் உழன்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.  ஆகவே படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து விடுங்கள். படுக்கைக்கு மடிக்கணினியையோ அலைபேசியையோ தூக்கிக் கொண்டு போகாதீர்கள். தினமும் நன்றாக உறங்குங்கள்; கோபம் உங்கள் பக்கம் எட்டியே பார்க்காது!

More News >>