மாநகரம் இயக்குநருடன் கைகோர்க்கும் கார்த்தி!

தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மாநகரம் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சிறிய பட்ஜெட் படம் என்றாலும் க்ரிப்பிங்கான திரைக்கதையால் புதிய இயக்குநருக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாநகரம் அமைந்தது.

இந்நிலையில், தேவ் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் கார்த்தி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில், தேவ் மற்றும் புதிய படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இது ஒரு பக்கம் இருக்க மீண்டும் சோழனின் பயணத்தை தொடங்கும் ஆசையில் இருப்பதாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருந்தது இன்னொரு சர்ப்ரைஸ் ஆகவே பார்க்கப்படுகின்றது.

ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எடுத்தால், அதிலும் கார்த்தி நடிக்க வாய்ப்பிருக்குமா என அவரது ரசிகர்கள் செல்வராகவனிடம் கேட்டு வருகின்றனர்.

என்.ஜி.கே படம் ரிலீஸ் எப்போ என்பதையே அவர் தெரிவிக்காத நிலையில், ஆயிரத்தில் ஒருவன் 2வுக்கான எதிர்பார்ப்புகளும் எகிற தொடங்கி விட்டது.

 

More News >>