ஹிந்து அல்லாதவர்களுடன் பழகுபவர்களுக்கு இதுதான் கதி - பஜ்ரங்தள் பகிரங்க மிரட்டல்

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், மூடிகெரே என்ற பகுதியை சேர்ந்த தன்யாஸ்ரீ (20) என்ற இளம்பெண், தனது நண்பரான சந்தோஷ் என்பவருடனான ‘வாட்ஸ்அப்’ உரையாடலில் எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் (I Love Muslim) என்று அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அவரது நண்பர் சந்தோஷ், உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தனது நண்பர்கள் குரூப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். அதேபோல உள்ளூர் பஜ்ரங்தள் நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப்பில் இதை அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பின்னர், பாஜக இளைஞர் பிரிவு கும்பல், தன்யாஸ்ரீ வீட்டுக்கே சென்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல், தன்யாஸ்ரீ படத்தையும், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் படத்தையும், இணைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த தன்யாஸ்ரீ, கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவி தன்யாஸ்ரீ தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஹிந்து அல்லாத இளைஞர்களுடன் பழகும் ஹிந்து மாணவிகள் இழப்பைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்று பஜ்ரங்தள் அமைப்பு மிரட்டியுள்ளது.

மூடிகெரே பஜ்ரங்தள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், “ஹிந்துத்துவாவை காக்க வேண்டியது பஜ்ரங்தள் அமைப்பின் கடமையாகும், இந்து அல்லாத இளைஞர்களுடன் பழகும் அனைவரும் கடும் இழப்பை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More News >>