சாக்கடையில் என் சாதியை தேடுங்கடா ரித்விகா காட்டம்!

பிக்பாஸ் சீசன் 2வில் வெற்றிப் பெற்ற ரித்விகாவின் சாதியை கூகுளில் பலர் தேடியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காட்டமான பதிலை ரித்விகா தெரிவித்துள்ளார்.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த ரித்விகா, பரதேசி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், மெட்ராஸ் தான் இவருக்கு நல்ல நடிகை என்ற அடையாளத்தை தேடி தந்தது. பின்னர் கபாலி படத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பட வாய்ப்புகள் குறைந்து போக, பிக்பாஸின் 2வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு, பல போட்டிகளில் வெற்றிப்பெற்று 108 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கி இருந்து டைட்டிலையும் ரித்விகா வென்றார்.

ஆனால், அவரது சாதி காரணமாக அவருக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைத்ததாக தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், ரித்விகாவின் சாதி குறித்து பலர் கூகுளில் தேடியுள்ளனர்.

இதனால், கடுப்பான ரித்விகா, ”ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு, நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதற்காக பிக்பாஸில் வின்னர் ஆனேன் என விமர்சிப்பவர்களுக்கு, நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை, நான் எந்த சாதியென்று உங்கள் சாதி சாக்கடையில் விழுந்து தேடி கண்டுபிடிச்சிக்கோங்கடா” என காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More News >>